இந்தியா
இந்துக்கள் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை இது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குறிய விதமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தங்கள் பேச்சுக்களில் சர்ச்சைக்குறிய வார்த்தைகளை பயன்படுத்தி விட்டு பின்னர் தங்கள் கருத்தில் இருந்து பின்வாங்குவதே இவர்களது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியுள்ளார். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சராக உள்ள அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், சமீபத்தில் சபரிமலையில் இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்தது இந்துக்களின் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை போன்றது. சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்துவிட்டது. மேலும் இந்து பெண்கள் மீது யாராவது கை வைத்தால், அவர்கள் கையை வெட்டுங்கள் என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பேசி இருப்பது பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக பாஜக வழக்கம் போல இதனை பாஜகவின் கருத்து கிடையாது. அவரின் தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளது.