சினிமா
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: நடிகை பானுபிரியா மீது வழக்கு பதிவு!
பிரபல நடிகை பானுபிரியாவின் வீட்டில் வேலைபார்க்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அந்த சிறுமியின் தாய் ஆந்திராவில் கொடுத்த புகாரின் பேரில் நடிகை பானுப்ரியா மற்றும் அவரின் அண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது மகளை நடிகை பானுபிரியாவின் வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகை பானுபிரியாவின் அண்ணன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியின் தாய் பத்மாவதி விபரம் அறிந்து அங்கு சென்றபோது அவர்கள் சிறுமியை சந்திக்க விடாததால் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பானுபிரியா இந்த புகார் தொடர்பாக பேசியபோது, பத்மாவதியின் மகள் எங்கள் வீட்டிலிருந்து பல பொருட்களைத் திருடியிருக்கிறார்.
இதனை கண்டுபிடித்த நாங்கள் அவள் திருடிய பொருட்களையும் பணத்தையும் திரும்ப கேட்டோம். பொருட்களைத் திரும்ப கொடுத்தவர் பணத்தைக் கொடுக்கவில்லை. இதனையடுத்து பணம் வரவில்லை என்றால் காவல்துறையில் புகார் செய்வோம் என்றோம். ஆனால் பொருளையும் பணத்தையும் திருட்டுக் கொடுத்துவிட்டு இப்போது இந்த பழியையும் சுமந்து செல்கிறோம் என்ற அவர் அந்த சிறுமி என் வீட்டில் தான் இப்போது வரையிலும் இருக்கிறார் என்றார்.