இந்தியா
ஆதார் கை ரேகையை 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்? ஏன்? கட்டணம் எவ்வளவு? முழு விவரங்கள்!
தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெரும் போது 5 வயது வரையில் பெற்றோர் கை ரேகை விவரங்களுடன் இருக்கும், பின்னர் 5 முதல் 15 வயது வரையில் ஒரு முறையும் 15 வயதுக்கு பிறகு ஒரு முறையும் ஆதார் பாயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் பயனர்கள் தங்களது பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கத் தனி நபர் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 70 வயதுக்கு பிறகு இப்படி பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இதை கட்டாயம் செய்ய வெண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
கட்டணம் எவ்வளவு?
சிறுவர்களுக்கு இரண்டு முறை இலவசமாக ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க முடியும். ஆனால் விருப்பத்தின் பேரில் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆதார் கார்டு இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது. மேகாலயா, நாகாலாந்து மற்றும் லடாக் பகுதியில் குறிப்பிட்ட சில சதவீதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தமாக 24.2 லட்சம் நபர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 50 ஆயிரம் ஆதார் கார்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1.5 லட்சம் தபால் அலுவலகங்களிலும் ஆதார் கார்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் கார்டை கட்டாயம் பெற வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆதார் கார்டு வந்த பிறகு அரசு நலத் திட்டங்கள், பான் கார்டு போன்றவற்றில் உள்ள போலி பயனர்களுக்குக் கண்டறியப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.