தமிழ்நாடு
ஓபிஎஸ்-க்கு எதிராக கோஷம்: பொதுக்குழுவில் ஏற்பட்ட பரபரப்பு
இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதற்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒற்றை தலைமை உள்பட முக்கிய தீர்மானங்களை இயற்றக் கூடாது என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வர இருப்பதாகவும் கேபி முனுசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் ஒவ்வொரு பிரபலங்களும் தங்களது உரைகளை ஆற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது அதிமுகவின் ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிச்சாமி என்று பேசினார். அதை ஊர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது ’அதிமுகவின் நாளைய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி’ என்று பேசினார்.