தமிழ்நாடு
உன் அப்பன் வீட்டு கோட்டையா? ஓபிஎஸ்-ஐ ஒருமையில் விமர்சித்த ஸ்டாலின்!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் யாகம் நடத்தியதாக தகவல் பரவியது. ஆனால் தான் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன் என இதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தி வருகிறது. அதில் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இதிலிருந்து தப்பிக்கவே சில நாட்களுக்கு முன்பு கோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியிருக்கிறார்.
யாகம் நடத்தல, சாமிதான் கும்பிட்டோம்னு ஓபிஎஸ் சொல்லிருக்கார். நீ சாமி கும்பிட்டியா யாகம் நடத்தினியான்னு எங்களுக்கு கவலையில்லை. உன் வீட்டில நடத்தியிருக்கலாம். ஆனா கோட்டைங்கிறது உன் அப்பன் வீட்டு கோட்டையில்லை. மக்களின் வரிப்பணத்தால் நடைபெறக் கூடிய கோட்டை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டத்தை மீறி யாகம் வளர்ப்பதையோ அல்லது சாமி கும்பிடுவதையோ செயல்படுத்தினால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மு.க.ஸ்டாலின் ஒருமையில் விமர்சித்தார்.