தமிழ்நாடு
சசிகலாவை பாஜக ஏற்று கொள்ளுமா? அண்ணாமலை பதில்!
பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் என நேற்று பாஜகவின் பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவில் சசிகலா இணைய விரும்பினால் அவரை பாஜக ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் முதல்வராக முயற்சித்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பு கிடைத்ததை அடுத்து சிறைக்குச் சென்றார்
சிறையிலிருந்து திரும்புவதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கைகளுக்கு அதிமுக சென்று விட்டது. அதிமுகவை மீட்க முடியாமல் திணறிய சசிகலா, அதிமுகவில் இணைய முயற்சித்தார்.
இந்த நிலையில் சசிகலா பாஜகவில் இணைய வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ’பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியது அவருடைய சொந்த கருத்து என்றும் இது ஒரு தனி மனிதன் முடிவெடுக்கக் கூடிய விஷயம் கிடையாது என்றும் இதுபோன்ற நிகழ்வு நடக்கும் என்றால் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துடன் ஆலோசனை நடத்தி அவர்களின் வழிகாட்டுதல்படி முடிவு எடுப்போம் என்றும் கூறியுள்ளார்