இந்தியா
விஜய்யை பார்த்த தெலுங்கானா முதல்வர், பிரதமரை தவிர்த்தது ஏனோ?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை தெலுங்கானா முதல்வர் சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதை தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வந்த நிலையில் அவருடனான சந்திப்பை தவிர்க்கும் விதத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெங்களூர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை பிரதமர் ஹைதராபாத் வந்தபோது அவரை தெலுங்கானா முதல்வர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை தெலுங்கானா மாநில அமைச்சர்கள் மட்டுமே வரவேற்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று காலையே பெங்களூர் சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் எதிர்கால தேசிய அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிகிறது.
ஹைதராபாத் பயணத்தை முடித்துவிட்டு சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையை அடுத்து சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.