சினிமா செய்திகள்
வெற்றிமாறனின் ‘விடுதலை’ இரண்டு பாகங்களாக வெளியாகிறதா?
வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் படத்தின் நீளம் திட்டமிட்டதை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டிய நிலை இருப்பதால், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகம் இந்த வருடமும், இரண்டாம் பாகம் அடுத்த வருடமும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி நக்சலைட் கேரக்டரிலும், சூரி காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளனர். சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கு ஸ்டண்ட் காட்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற மலைப் பகுதியில் கிராமம் போன்ற செட் போடப்பட்டு இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
முதன்முறையாக வெற்றிமாறனின் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்திற்காக அவர் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெற்றிமாறனின் ‘வடசென்னை’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அது கிட்டத்தட்ட நிறைவேறாமல் போய்விட்டது. ஆனால் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளி வருவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.