தமிழ்நாடு
இந்த நேரத்தில் பவர்கட் இருக்கவே கூடாது: மின்வாரியம் சுற்றறிக்கை
நிலக்கரி பற்றாக்குறை உள்பட பல காரணங்களால் அவ்வப்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மின்வெட்டு காரணமாக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பொதுத் தேர்வின் போது எந்த காரணத்தை முன்னிட்டும் மின்வெட்டு இருக்க கூடாது என்றும், 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் மின்வாரியம் அனைத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதைகள் பற்றி ஆய்வு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தில் நிறுத்தம் இருந்தாலும் தேர்வு நேரத்தின்போது பராமரிப்பு பணி செய்யக் கூடாது என்றும் தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகள் ஆய்வு செய்து எந்தவிதமான மின் வெட்டும் இல்லாமல் இருக்கும் வகையில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.