தமிழ்நாடு
தேரில் உரசிய உயரழுத்த மின்கம்பி: தஞ்சை விபத்தில் 12 பேர் பலி
தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவின் போது தேரில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை அருகே களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடத்த திட்டமிட்டிருந்த இந்த தேரோட்டத்தின்போது தேர் வீதியில் உலா வந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சாரம் தேரின் மீது பாய்ந்தது.
இதனால் தேர் தீப்பற்றி எரிந்தது. உயரழுத்த மின்சாரம் பாய்ந்தபோது தேரை பிடித்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
இந்த விபத்து குறித்து முதல் கட்ட விசாரணையில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து விபத்து கூறப்படுகிறது. தேரை சூழ்ந்திருந்த தண்ணீர் காரணமாக 50 பேர் தள்ளி நின்றதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய தஞ்சை மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.