தமிழ்நாடு
ஏழு வருட சிறை தண்டனை: ஸ்டாலினை எச்சரிக்கும் அதிமுகவின் கே.பி.முனுசாமி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த கொலை,கொள்ளை சம்பவங்கள் குறித்து நேரடியாக புகார்கள் கூறப்பட்டிருப்பதால் ஆளுநர் இதில் தலையிட வேண்டும் என்றும் , முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து உடனடியாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டில் உண்மையே இல்லை. இதில் ஸ்டாலின் தோற்றுப்போவார், அவமானப்படுவார் என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும் ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை, அபாண்டமான கொலைக் குற்றச்சாட்டுகளைக் கூறினால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் புகார் கூறியவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதையும் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன் என்றார் கே.பி.முனுசாமி.