தமிழ்நாடு
மீண்டும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தில் 50க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து முகக்கவசம் அணிவது உள்பட பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும் போது ’மாஸ்க் அணிவது போன்றவற்றை பின்பற்றாவிட்டால் டெல்லி நிலைமைதான் தமிழகத்திலும் ஏற்படும் என்றும் அதனால் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும் பல இடங்களில் சானிடைசர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது கவலைக்குரியதாக உள்ளது என்றும் தமிழகத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை என கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கவனக் குறைவு ஆகியவை தான் கொரோனா பரவுவதற்கான முக்கிய காரணம் என்றும் எனவே கண்டிப்பாக மக்கள் இன்னும் சில மாதங்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பரிசோதனைகளை தினமும் 25 ஆயிரம் என அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மாஸ்க், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.