இந்தியா
ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அதிர்ச்சி!
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென ஹாங்காங் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக ஹாங்காங் செல்ல இருந்த விமான டிக்கெட்டை பலர் கேன்சல் செய்து விட்டு பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குறைந்த பயணிகள் மட்டுமே இருப்பதால் ஹாங்காங் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஹாங்காங் அரசு திடீரென இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.