தமிழ்நாடு
பாஜக உடன் கூட்டணி வைக்க ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் ஆசை: தமிழிசை பதிலடி!
தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடியபோது பழைய நண்பர்களுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
முன்னர் வாஜ்பாய் காலத்தில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்ததால் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதில், பிரதமர் மோடியையும், பாஜகவையும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை டெல்லியில் இருந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், நம்மைத்தான் அழைக்கிறார்கள் என்று ஸ்டாலினாகவே நினைத்துக் கொள்கிறார். நண்பர்கள் என்று சொன்னதை, பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை திமுக மறுக்க முடியாது. வாஜ்பாய் எவ்வளவு மதிக்கப்பட்டாரோ அந்தளவு பலம் வாய்ந்த தலைவராக மோடி இருக்கிறார்.
திமுகவை நாங்கள் அழைத்தது போல ஸ்டாலின் ஏன் பதறுகிறார் என்று தெரியவில்லை. ராகுல் காந்தியுடன் இணக்கமாக இருக்கும் திமுக, நாங்கள் அழைக்கிறோம் என ஏன் நினைக்க வேண்டும். ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து இதற்கு திமுகவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஸ்டாலின் கூறியதிலிருந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க அவருக்கு உள்ளுக்குள் ஆசை வந்துள்ளதோ என்று என்னத் தோன்றுகிறது என்றார் தமிழிசை.