சினிமா செய்திகள்
மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த தமிழ் ஹீரோ: காவல்துறையிடம் புகார்
தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் கோடிக்கணக்கில் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து உள்ளதை அடுத்து அவர் தனது பணத்தை மீட்டுத்தர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரிடியம் மோசடி கும்பல் தொழிலதிபர் மற்றும் திரையுலக நட்சத்திரங்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் ஹீரோ விக்னேஷ் சென்னை காவல்துறை ஆணையரிடம் இரிடியம் மோசடி கும்பலிடம் ரூபாயை 1.82 கோடி இழந்ததாக புகார் அளித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய கிழக்குசீமையிலே, பசும்பொன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவரது வாடிக்கையாளர் ராம்பிரபு என்பவர் இவரிடம் பேசி பழகி நண்பராகி இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்களை கூறியதாகவும் பல ரகசிய கூட்டங்களில் கலந்துகொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரிடியம் தொழிலில் 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி லாபம் கொடுக்கும் என அவர் கூறியதை நம்பி 1.82 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் லாபத் தொகையை கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து நடிகர் விக்னேஷ் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் விக்னேஷ் போன்றே ஏராளமானவர்களிடம் மோசடி செய்துள்ள ராம் பிரபு தற்போது விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.