தமிழ்நாடு
பதவியை ராஜினாமா செய்ய முடியாது: திமுக நகராட்சி தலைவரின் கணவர் பேட்டி!
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என நெல்லிக்குப்பம் திமுக நகராட்சி தலைவரின் கணவர் பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது .
ஆனால் திடீரென திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டியிட்டதால் அவருக்கு 22 வாக்குகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இதனை அடுத்து திமுக வேட்பாளர் ஜெயந்தி நகராட்சி தலைவர் பதவியை வென்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் முறையிட்டனர். இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
ஆனால் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் இது குறித்து கூறிய போது தாங்கள் திமுகவின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறவில்லை என்றும் நகர மக்களின் நன்மை கருதி அதிமுக தேமுதிக பாமக கவுன்சிலர்களும் தங்களுக்கு வாக்களித்ததாகவும், மக்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டு பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் எங்களது நிலைப்பாட்டை தலைவரிடம் விளக்குவோம் என்றும் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.