தமிழ்நாடு
முதலில் முதல்வர் தொகுதியில் அமல்படுத்துங்கள்: பிளாஸ்டிக் தடை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!
பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முதலில் பிளாஸ்டிக் தடை என்பதை முதலமைச்சரின் தொகுதியில் அமல்படுத்துங்கள் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டதையடுத்து எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது சரியே என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக்கை கொண்டு வருவதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்றும் முதலில் அனைத்து மாநிலங்களிலும் தடை விதித்தால் தான் இந்த பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக எந்த பொருளை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு அதன் பிறகு பிளாஸ்டிக்கை ஒழிக்கலம் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இதுகுறித்து உத்தரவிட்ட நீதிமன்றம் முதலில் பிளாஸ்டிக் தடையை முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்துங்கள் என்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக்கை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்தார்.