தமிழ்நாடு
வெறும் 44 ஓட்டுக்கள் தானா? அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட கமல் கட்சி வேட்பாளர்!
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அதிமுக மற்றும் பாஜக சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உட்பட ஒருசில கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை என்பதும் கிட்டத்தட்ட அனைவரும் டெபாசிட் இழந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் 36வது வார்டில் போட்டியிட்டவர் மணி. இவர் தேர்தல் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்த நிலையில் வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டையும் இழந்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மனமுடைந்த இருந்த மணி தற்போது தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.