உலகம்
போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்ய பிரதமர் புதினிடம் மோடி பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் நேற்று ரஷ்ய ராணுவத்தினர்களுக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துமாறு ரஷ்ய பிரதமர் புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக 137 பேர் பலியானதாகவும் இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
உக்ரைன் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவுக்கு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்தார் .
இந்த நிலையில் நேற்று இரவு தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் இடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலுக்கு உடனடியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ மற்றும் ரஷ்யா இடையிலான வேறுபாடுகளை களைவதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வன்முறை எந்த காலத்திலும் தீர்வாகாது என்றும் பிரதமர் மோடி ரஷ்ய பிரதமரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொள்வதாகவும், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.