இந்தியா
தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு: முக்கிய அமைச்சர் கைது!
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராகிம் என்று தெரிந்ததே. அவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகவும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத கட்சியின் அமைச்சர் நவாப் மாலிக் என்பவர் அதிரடியாக அமலாக்கத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டு பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் ஒருவரே கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.