இந்தியா
ஹிஜாப் வழக்கின் நீதிபதிக்கு மிரட்டல்: பிரபல நடிகர் கைது!
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிரான கருத்தை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்த கன்னட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு முடியும் வரை மாணவர்கள் மாணவிகள் எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிக்கு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத அடையாளத்துடன் வரும் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதையும் மீறி கர்நாடகத்தில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்துவரும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கன்னட நடிகர் சேத்தன் குமார் என்பவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்துக்கு எதிராக கருத்து கூறிய சேத்தன் குமார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.