இந்தியா
நிர்மலா சீதாராமன் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்: விடாமல் துரத்தும் ராகுல் காந்தி!
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கேள்விகளால் பாஜகவை மக்களவையில் திணறடித்து வருகிறார். இது தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான, நேரடியான, நேர்த்தியான பதிலை அளிக்காமல் காங்கிரஸை விமர்சிப்பதிலேயே பாஜக குறியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மக்களவையில் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்தார். ஆனால் அவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேர்த்தியான பதில் அளித்தாரா என்பது கேள்விக்குறிதான்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நாங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளோம், ஆனால் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. 2 மணி நேரம் வரை பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த இடத்திலும் அனில் அம்பானியைக் குறிப்பிடவில்லை. பிரதமர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட போதா விமானப்படை ஆட்சேபம் தெரிவித்தது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிர்மலா சீதாராமன் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
எங்கள் கேள்விகளுக்குப் பிரதமர் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதமர் அவையில் பேசாமல் அறையில் இருக்கிறார். மக்களவைக்குள் வர மறுக்கிறார். மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கிரிமினல் விசாரணை செய்யப்படும் என்றார்.