இந்தியா
அதளபாதாளத்தில் இறங்கிய மும்பை பங்குச்சந்தை: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை உள்ளது என்பதும் அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டம் அடைந்து உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச் சந்தை தொடங்கியதிலிருந்தே அதல பாதாளத்தில் சென்றது. இன்று காலை 9:15 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கி உடனே ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தது.
இதனை அடுத்து சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடைந்த போது 1747 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 56405 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 532 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 842 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத வகையில் பேங்க் நிப்டி 1608 புள்ளிகள் குறைந்து 36 ஆயிரத்து 908 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் – ரஷியா இடையே போர் மூளூம் என்ற அச்சம் நிலவுவதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்ததாகவும் இன்று ஒருநாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.