தமிழ்நாடு
அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 5 மடங்கு மின்கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஐந்து மடங்கு மின் கட்டணம் மற்றும் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் மின் இணைப்பு மற்றும் சொத்து வரி வசூல் செய்து கொண்டிருப்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வரும் போது தாங்கள் மின்கட்டணம் செலுத்தி வருவதாகவும் சொத்துவரி செலுத்தி வருவதாகவும் அதனால் இடிக்கக் கூடாது என்றும் நீதி கேட்டு நீதிமன்றம் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் மின் இணைப்பு மற்றும் சொத்து வரி வசூலிக்கும் முன்னர் அந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டதா? புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதா? என்பதை ஆய்வு செய்து அதன் பின்னரே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது
இந்த நிலையில் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவுப்படி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை 5 மடங்கு அதிகமாக விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.