தமிழ்நாடு
நீட் தேர்வில் வெற்றி: 541 தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட்!
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வந்தபோதிலும் நீட்தேர்வால்தான் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் பெற்று வருகின்றனர் என்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்துவரும் நிலையில் அரசியல்வாதிகள் மட்டும் தங்களுடைய சுயநலம் காரணமாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 541 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட் நீட் தேர்வால் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 541 மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 54 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் படித்த ஒரு மாணவி நீட் தேர்வில் 394 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார்.
அதேபோல் மதுரையில் 5 மாணவிகள் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேருகின்றனர். கோவை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 5 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
அதே போன்று தென்காசி மாநகராட்சி பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகளும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். தென்காசி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாணவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் பெற்று வரும் நிலையில் இனிமேலாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கொள்கையை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் மத்தியில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.