உலகம்
அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள்: 200 வீடுகள் தரைமட்டம்!
ஹைத்தி நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதை அடுத்து 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் 600 வீடுகள் சேதம் ஆனதாகவும் இதுவரை 2 பேர் பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஹைத்தி என்பதும் அங்கு நேற்று இரவு ஏற்பட்ட வலிமை வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைத்தி நாட்டின் தலைநகர் போர்ட் அயு பிரின்சின் என்ற நகரின் மேற்கு பகுதியில் திடீரென நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 என ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் பூமி குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏறத்தாழ 200 வீடுகளுக்கும் அதிகமாக தரைமட்டமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த பகுதியில் 600 கட்டடங்கள் சேதம் ஆனதாகவும் இதுவரை இடிபாடுகளுக்கு இடையே இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இடிபாடுகளிலிருந்து மீட்பு படையினர் மக்களை மீட்டு வருகின்றனர் என்பதும் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஹைத்தி நாட்டின் மீட்பு பணிக்கு அண்டை நாடுகளும் உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து வீடுகளில் விட்டு பொதுமக்கள் அலறி அடித்து சாலையில் ஓடிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AbyssChronicles/status/1485683389764149249