தமிழ்நாடு
தமிழக ஊர்தி நிராகரிப்பு: பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் சாரம்சம்!
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி வெளியானவுடன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக பிரமுகர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ததாகவும் விரைவில் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷா அல்லது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை மத்திய அரசு அதிகாரிகளிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர் என்றும் திருத்தங்கள் செய்து சமர்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரிப்பது ஏற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நான்காவது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலே குடியரசு தின அணிவகுப்பில் இருந்தது தமிழகத்தின் ஊர்திகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக வஉசி, பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர்களின் அலங்கார ஊர்தி மறுக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.