கிரிக்கெட்
எப்படியும் இந்தியாவுக்கு தான் வெற்றி: ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ஆதிக்கம்!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையிலும் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி சிறப்பாக பொறுமையாக விளையாடி 443 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது. மிகவும் கடினமான அந்த ஆடுகளத்தில் இந்தியா 443 ரன்கள் குவித்தது மிகப்பெரிய விஷயம். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியால் இந்திய வேகப்புயல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்தது. அந்த அணி 151 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவின் பும்ரா சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து முன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தற்போது 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 15 விக்கெட்டுகள் அந்த ஆடுகளத்தில் விழுந்துள்ளது.
இந்திய அணியில் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி விரைவில் வீழ்த்தினாலும் இந்தியாவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கொண்டு 50 ரன்கள் எடுத்தாலே இந்தியா 400 ரன்களை நெருங்கிவிடும். 400 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்ஸில் எடுப்பது மிகவும் கடினம் என்பதால் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகம் உள்ளது. ஆடுகளம் கடைசி நாட்களில் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.