தமிழ்நாடு
வண்டலூர் பூங்காவை அடுத்து கிண்டி சிறுவர் பூங்காவும் மூடல்!
வண்டலூர் பூங்காவில் பணிபுரியும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் பூங்காவை மூட உத்தரவிட்ட நிலையில் தற்போது கிண்டி சிறுவர் பூங்காவையும் மூட உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தினமும் சுமார் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் மெரினா பீச் உள்பட அனைத்து கடற்கரைகள், சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவை மூட நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்காவில் நாளை முதல் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.