தமிழ்நாடு
அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை, ஆனால் பள்ளிகள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கு அதிகமானவர்கள் என்பதால் கிட்டத்தட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி துறை விடுமுறை அறிவித்திருக்கும் நிலையில் இன்னும் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவித்த போதிலும் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்கள் விஷயத்தில் தமிழக அரசு ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் பெற்றோர்கள் மத்தியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
சற்றுமுன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் இந்த முடிவில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.