தமிழ்நாடு
இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி: தொலைபேசி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கு சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறு இல்லத்திற்கு வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த விருப்பப்படுபவர்கள் 1913, 044-2538 4520, 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இல்லத்திற்கே சென்று செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பு ஊசியும் இல்லத்திற்கே சென்று செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.