தமிழ்நாடு
இன்று பிரதமர், முதல்வர் தனித்தனியாக ஆலோசனை: முழு ஊரடங்கு உள்பட கூடுதல் கட்டுப்பாடுகளா?
![Modi - MK Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/Modi-MK-Stalin.jpg)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பதும் அதேபோல் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் நாடு முழுவதும் ஊரடங்கு அல்லது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் மாநிலங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு 10ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் முடிவடைவதால் தமிழக முதல்வரும் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முழு ஊரடங்கு உத்தரவு இருக்காது என்றாலும் மிக அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர்கள் தனித்தனியாக செய்யும் ஆலோசனைக்கு பிறகு வெளிவரும் அறிவிப்பில் பல அதிரடி கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.