தமிழ்நாடு
தெம்பும், திராணியும் இருக்கிறதா?: தம்பிதுரைக்கு திமுக சவால்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுக தான் காரணம் என அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறிய கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் அவர் மீது திமுக தொடர்ந்த வழக்குதான். கலைஞரும், ஆர்.எஸ்.பாரதியும்தான் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளினார்கள். அந்த உளைச்சல் காரணமாகத்தான் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே ஜெயலலிதா மரணத்துக்கு முழுக் காரணமும் திமுகதான் என்றார் தம்பிதுரை.
இதற்கு பதிலடி கொடுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மாநாடுகளில் கூடுவதைப்போல மக்கள் கூட்டம் கூடுகிறது. நாளை கரூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைபுரிவதை கண்டு, மிரண்டு, கரூர் தொகுதி அதிமுக எம்.பி. தம்பிதுரை பித்தனைப் போல பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது. தம்பிதுரைக்கு தெம்பும், திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகதான் காரணம் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.