இந்தியா
ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள்: முதல்வரின் சர்ச்சைப் பேச்சு!
தனது கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் பிரமுகர் பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த கட்சியினர் மைசூரு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மஜத பிரமுகர் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட தகவல் அந்த கட்சியின் மாநில தலைவரும் அம்மாநில முதல்வருமான குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர், பிரகாஷை கொன்றவர்களை சுட்டுத்தள்ளுங்கள் என யாருக்கோ செல்போன் மூலமாக அறிவுறுத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என தெரியவில்லை. அவரைக் கொன்றவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள். பிரச்சினை எதுவும் வராது என்று குமாரசாமி பேசுகிறார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை, அரசு அதிகாரிகள் கொலை, ஊழல் குறித்தெல்லாம் கவலைப்படாத முதல்வர் தனது கட்சி நிர்வாகியை கொன்றவர்களை உடனடியாக சுட்டுக்கொள்ளுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிடுகிறார். குமாரசாமிக்கு அனைத்தும் தனது கட்சிதான் என பாஜக டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது. ஆனால் அது என்னுடைய உத்தரவு கிடையாது என குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.