இந்தியா
பஞ்சாப் துணை முதல்வர் வாகனத்தை மறித்த பாஜகவினர்: மோடி வாழ்க சொன்ன பின்னரே கிடைத்தது வழி!
சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வரும்போது பாதுகாப்பு குளறுபடி காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக பஞ்சாப் அரசு மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பாக பாஜக தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப் வரும்போது போராட்டக்காரர்கள் போராட்டம் செய்தது பஞ்சாப் அரசின் ஒத்துழைப்பால் தான் என குற்றம் சாட்டி வந்த பாஜக, நேற்று திடீரென பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது அவரை சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதற்காக பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனி பெரோஸ்பூர் வந்த நிலையில் அவரை தடுத்து நிறுத்திய ஏராளமான பாஜகவினர் அவரை மேற்கொண்டு நகர விடாமல் முடக்கினார்கள். மேலும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் விட்டதோடு பஞ்சாப் முதல்வர் காரை விட்டு கீழே இறங்கி ’மோடி வாழ்க’ என்று சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதன் பின்னர் பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனி, ‘மோடி வாழ்க’ என கூறிய பின்னரே அவரது வாகனத்திற்கு பாஜகவினர் வழி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Punjab: Deputy Chief Minister OP Soni raised slogans of 'Modi Zindabad' as BJP leaders surrounded#Punjab #Modi #BJP pic.twitter.com/HDQVGfBCVg
— THE UNSTOPPABLE WINGS (@the_wings_2002) January 7, 2022