இந்தியா
பிரதமரின் காரை மறித்த விவசாயிகள்: பஞ்சாப் பயணத்தை ரத்து செய்தார் மோடி!
இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முடிவு செய்திருந்தார். அந்த பகுதியில் ரூபாய் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மோடியின் கார் பஞ்சாப் மாநிலத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை திடீரென விவசாயிகள் மறித்ததாகவும், அதன் காரணமாக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் வரை பாலத்தில் நின்று கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் விவசாயிகள் மறித்ததால் பிரதமர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் வாகனத்தை பஞ்சாபில் போராடும் விவசாயிகள் முடக்கி இருப்பதாக கூறப்பட்டாலும் மத்திய அரசு சார்பில் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் மாநிலத்த்ஹில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.