தமிழ்நாடு
மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி; பிரதமரை நாங்கள் தீர்மானிப்போம்: தினகரன் அதிரடி!
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிரும் என்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நாங்கள் உருவெடுப்போம் எனவும் கூறியுள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமமுக மெகா கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தினகரன், மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். தமிழக மக்களின் நலனுக்காக 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார்.
அதேப்போல அவருடைய வழியிலேயே தொண்டர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் முடிவில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நமக்குத் தெரியும். எனவே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பர் என்றார் அதிரடியாக.