உலகம்
பூஸ்டர் தடுப்பூசி போட்டும் பயனில்லை: புயல் போல் ஒமிக்ரான் பரவுவதாக தகவல்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் அளித்த பேட்டியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் பயனில்லை என்றும் இஸ்ரேல் நாட்டில் புயல்போல் கொரோனா, ஒமிக்ரான் நெருங்கி வருகிறது என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 700 என இருந்த நிலையில் கடந்த ஞாயிறன்று 4000ஐ கடந்து விட்டது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்றும் பிரதமர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன் என்ற நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அதாவது 4.2 மில்லியன் பேர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும் இருப்பினும் புயல் வேகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் முதல் அலை 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இஸ்ரேல் போலவே உலகெங்கிலும் இந்த ஆண்டு ஒமிக்ரான் வைரசால் பல நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.