இந்தியா
10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பால் திண்டாடி வரும் மாநிலம் மகாராஷ்டிரா என்பதும் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மஹாராஷ்டிரா முதல்வர் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதில் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.