சினிமா
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி – திரையுலகினர் அதிர்ச்சி
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
எனவே, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை நேரடி பள்ளிகளுக்கு தடை, திருமண விழாக்களுக்கு 100 பேர் மட்டுமே அனுமதி, மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதி, உறைவிடங்களில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி என பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. இதில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்கிற அறிவிப்பும் ஒன்று
பல மாதங்களுக்கு பின் தற்போதுதான் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை அனுமதியோடு நடத்தப்பட்டு வருகிறது. மாநாடு போன்ற படங்கள் நல்ல வசூலையும் கொடுத்தது. மேலும், பொங்கலுக்கு வலிமை, ஆர்.ஆர்.ஆர் ஆகிய பெரிய படங்கள் வெளியாகவுள்ளது.
இதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7ம் தேதியே திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையோடு மட்டுமே இந்த படங்கள் ஒளிபரப்பப்படும். அதோடு, 10ம் தேதிக்கு பின் இதே நிலமை தொடருமா என்பதும் தெரியவில்லை.
எனவே, அரசின் இந்த அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.