தமிழ்நாடு
சென்னையில் திடீர் கனமழைக்கு காரணம் என்ன? வானிலை இயக்குனர் தகவல்!
சென்னையில் இன்று மதியம் வரை மழைக்கு உரிய எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென மதியம் 2 மணிக்கு மழை பெய்தது. ஒரு சில நிமிடங்களில் மழை விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்னும் பல பகுதிகளில் விட்டுவிட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட வானிலை நிலவும் சென்னையில் திடீரென கனமழைக்கு என்ன காரணம் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
வங்ககடலில் எதிர்பார்த்ததைவிட திடீரென வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாகவும் அந்த சுழற்சி நிலப்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்ததால் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் சில இடங்களில் மழை பெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடற்கரையோர பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு மழை தொடரும் என்றும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.