இந்தியா
1000ஐ நெருங்கியது ஒமிக்ரான் பாதிப்பு: டேஞ்சர்ஜோனில் இரண்டு மாநிலங்கள்!
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 961 பேர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இந்தியாவின் மொத்த பாதிப்பில் பாதிக்குமேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் 253 பேருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் 252 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் மேலும் 118 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு மட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்பும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 7 ஆயிரம் பேர்கள் மட்டுமே தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், இன்னும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.