செய்திகள்
தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பு – 3 பேர் டிஸ்சார்ஜ்…
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம் அவர்கள் அனைவரும் சிகிச்சையில் நலமாக உள்ளதாகவும், 24 பேரின் பரிசோதனை முடிவு இன்று வரவேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார். சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், சேலத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஓமைக்ரான் பாதிப்பு, எஸ்-ஜீன் டிராப் உறுதியானவர்களுக்கு 10 நாட்களில் பரிசோதனை நடைபெற்று நெகட்டிவ் வந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படும் எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.