தமிழ்நாடு
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை: திமுக பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை பற்றி அவதூறாக பேசியதாக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எல் முருகன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘மாரிதாஸ் குறித்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்றும், காவல்துறையினர் விசாரணை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதற்குள் அண்ணாமலை உள்பட பாஜகவினர் அவதூறாக பேசுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலையை தான் ஒரு மனிதனாகவே கருதவில்லை என்றும் அண்ணாமலை காவல்துறை அதிகாரிகள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு குறித்து தவறாக பேசி உள்ளார் என்றும் இதிலிருந்து அவர் ஒரு ஒழுக்கமான காவல்துறை அதிகாரியாக இருந்தவர் அல்ல என்பது தெரிய வருவது என்றும் கூறினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு குறித்து அவர் பேசியபோது முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம் என்றும் எல் முருகன் ஆஜரான பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜகவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.