தமிழ்நாடு
உணவின்றி தள்ளுவண்டியில் இறந்த விழுப்புரம் சிறுவன்: சிசிடிவியின் அதிர்ச்சி காட்சி
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் சலவை செய்யும் தொழிலாளி ஒருவர் காலையில் கடைக்கு வந்த போது அவரது தள்ளுவண்டியில் சிறுவன் ஒருவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த சிறுவன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அந்த சிறுவன் இரண்டு நாட்களாக சாப்பிடாததால் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து பசியால் ஒரு சிறுவன் இறந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இன்றுவரை சிறுவனுக்கு சொந்தம் கொண்டாடி ஒருவரும் வரவில்லை என்பதால் அந்த சிறுவன் யார்? அவனது பெற்றோர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு இருவர் நடந்து வந்து கொண்டிருக்கும் காட்சிகள் தென்பட்டன. அந்த இருவரும் வட மாநிலத்தவர் இருப்பதால் சிறுவனை கடத்தி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடத்தி வந்த நேரத்தில் சிறுவன் உயிரிழந்துவிட்டதால் அவனை தள்ளுவண்டியில் போட்டு விட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவனை தூக்கி வந்த அந்த இரண்டு பேர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அந்த இருவரும் பிடிபட்டால் இறந்த சிறுவன் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.