உலகம்
இன்று முதல் ஒமிக்ரானால் ஊரடங்கு உத்தரவு: எந்த நாட்டில் தெரியுமா?
![lockdown Netherlands - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Vertrek-Airport-Netherlands.jpg)
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட பரவிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் 3-வது அலை உருவாக்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன என்பதும் ஒரு சில நாடுகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டோ என்பவர் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக நெதர்லாந்து நாட்டில் ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக மிக வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை வல்லுநர்கள் பிரதமரிடம் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டின் மார்க் ரூட்டோ அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசியமான கடைகள் தவிர மற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், அருங்காட்சியங்கள், திரையரங்குகள் மூடப்படும் என்றும் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாடி கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.