தமிழ்நாடு
ஒமிக்ரான் எதிரொலியால் பள்ளிகள் தொடர்வது குறித்து 25ஆம் தேதி முக்கிய முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா உள்பட உலகின் எழுபத்தி ஏழு நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிக அதிகமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று வரை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படாமல் இருந்த தமிழகம் நேற்று ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து சுழற்சி வகுப்புகள் கிடையாது என்றும் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுமா? அல்லது கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படுமா? என்பதை 25ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.