இந்தியா
கல்லூரி மாணவிகளுக்கும் பேறுகால விடுப்பு: யுஜிசி உத்தரவு
அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியகுழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
யுஜிசி சட்டம் 2016-ன் படி, எம்.பில்., பி.எச்டி. படிப்புகளைப் படித்துவரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் படிப்புக் காலத்தின்போது 240 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கலாம்.
இதுதவிர்த்து, அனைத்து உயர் கல்வி நிலையங்களும் தங்களின் நிறுவனங்கள், கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பை வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தேர்வுக் கால சலுகைகள், வருகைப் பதிவேடுகளில் சலுகைகள் வழங்கிட ஏதுவாகவும் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பைப் படிக்கும் மாணவிகளுக்குத் தேவை கருதி பிற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.