இந்தியா
ஒரு வருடமாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்: கூடாரங்கள் அகற்றம்
டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3 புதிய வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது என்பதும், இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்பட ஒருசில மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடந்துவந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார்.
மேலும் மத்திய அரசு வழங்கிய திருத்தி அமைக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதிமொழியையும் விவசாயிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை வாபஸ் பெறுவதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக டெல்லி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.