இந்தியா
அடுத்த முப்படை தலைமை தளபதி யார்? ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருத்து!
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சங்கர் ராய் சவுத்ரி அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள். இதனை அடுத்து 13 பேரின் உடல்களை டெல்லிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று டெல்லியில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியான பிபின் ராவத் அவர்கள் மறைவை அடுத்து அடுத்த தலைமை தளபதி பதவிக்கு வருபவர் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சவுத்ரி அவர்கள் கூறியபோது, ‘மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் அவர்கள் சிறந்த ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் முப்படைகளுக்கும் தேவையான மாற்றங்களை அவர் செய்து வந்தார் என்றும் அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கடற்படை விமானப்படை மற்றும் தரைப்படை ஆகிய மூன்று படைகளிலும் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வருவதில் பிபின் ராவத் சிறப்பாக பணியாற்றினார் என்றும் அடுத்த முப்படை தளபதி தேர்வு செய்யப்படுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சீனியாரிட்டி மற்றும் திறமையின் அடிப்படையில் முப்படை தளபதி தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த பணிக்கு தகுதியானவரா என்பதை அறிந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்ற அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.